மாரி செல்வராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

மாரி செல்வராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்!
வாழை திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் யார் என்பதை வாழை திரைப்படம் எடுத்துக் காட்டும் என்று தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் பயணித்த அவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி நடித்த மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் நன்கு பிரபலமடைந்துவிட்டார். இந்நிலையில் தனது இயக்கத்தில் அடுத்த படமான வாழை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்துகொண்டு படத்தைப் பற்றியும் மாரி செல்வராஜ் பற்றியும் பேசினர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

வாழை திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மிஷ்கின் மற்றும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், வாழை திரைப்படம் செல்வராஜ் வாழ்க்கையில் நடந்ததை சினிமா மூலம் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் நடந்த விஷயம் என்பதால் ஒரு சந்தோஷமான விஷயத்தை தாண்டி அவர் வாழ்க்கையில் நடந்த மிக பெரிய நிகழ்வை இப்படத்தில் காட்டியுள்ளார். எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், சந்தோஷம், சிரிப்புகளை அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்யும் போது அந்த சினிமா ரொம்ப அழகாக இருக்கிறது. அதைபோல் வாழை திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் அவர் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்கள் மற்றும் மிக முக்கியமான நிகழ்வுகளை இப்படத்தில் கூறியுள்ளார்.

இப்படத்தை பார்க்கும் போது நமக்கு நெருக்கமான ஒருவரிடம் அவர்களில் கதை கேட்கும் போது என்ன உணர்வு வருமோ, அந்த உணர்வு தான் வாழை திரைப்படம். இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள், இசை, எல்லாம் நமக்கு நெருக்கமான ஒரு உணர்வு தருகின்றன.

இப்படம் முழுக்க முழுக்க வாழ்வியலை மட்டுமே சார்ந்த படமாகியுள்ளது என மாரி செல்வராஜ் அவர்களே கூறியுள்ளார். எனக்கு பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு ரொம்ப பிடித்த படமாக வாழை அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் யார்?, அவர் வாழ்க்கை என்ன?,

அவர் என்னென்ன விஷயங்களை கடந்து இன்றைக்கு இயக்குநர் ஆனார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு இப்படம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இப்படம் விருதுகளை வாங்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

Tags

Next Story