ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான PS-2 Anthem பாடல்

ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான PS-2 Anthem  பாடல்
X

ஏ.ஆர்.ரஹமான்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் PS-2 Anthem பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியானது. அதேபோல் யூடியூபில் வெளியான அக நக, வீரா ராஜ வீர ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதேபோல பொன்னியின் செல்வன் 2 படத்தின் ”சிவோஹம்” பாடலின் லிரிக்கல் வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. இப்பாடல் யூடியூபில் மட்டும் 8லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படக்குழு PS-2 Anthem எனும் பெயரில் புதிய பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலில் வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரலில் பாடி நடித்துள்ளார். சிவ ஆனந்த் எழுதியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நபீலா மான் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். “ராஜ ராஜ ராஜனோ…. நாணம் வென்ற வீரனோ” என்று ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் இப்பாடலில் ரசிகர்களைடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story