வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை இது
![வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை இது வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை இது](/images/placeholder.jpg)
பொன்னியின் செல்வன் நாவலை, முதலில் திரைப்படமாக தயாரிக்க ஆசைப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். (கோப்பு படம்)
பொன்னியின் செல்வன் படத்தில், வந்தியத்தேவனாக கமல்ஹாசனும், குந்தவையாக ஸ்ரீதேவியும் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் ஒருவர். இந்த ரகசிய தகவலை, சமீபத்தில் பகிரங்கப்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்தாண்டு வெளியானது. வரும் 28ம் தேதி 2ம் பாகம் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
அந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகையர், இயக்குநர், இசையமைப்பாளர் உள்பட படக்குழுவினரும் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் பாரதிராஜாவும் கலந்துகொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மிகவும் விரும்பி படித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் புத்தகங்கள் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ( சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், எம்ஜிஆர் வாசித்த புத்தகங்கள், நூற்றுக்கணக்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன).
நடிகராக இருந்த எம்ஜிஆர், தமிழக முதலமைச்சராக ஆட்சி செய்த காலத்தில், அவருக்கு சினிமாவில் நடிக்க நேரம் இல்லை, இருந்த போதிலும், பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக பாரதி ராஜாவை நேரில் அழைத்து பேசிய எம்ஜிஆர், அந்த படத்தை பாரதிராஜாவை இயக்க வேண்டும் என்று உத்தரவாக கூறி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்த வந்தியத் தேவன் கேரக்டரில் கமல்ஹாசனும், கதையின் முக்கிய நாயகியாக வரும் த்ரிஷா நடித்த குந்தவை கேரக்டரில் ஸ்ரீதேவியும் நடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறி இருக்கிறார்.
இந்த ருசிகரமான தகவலை, சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இசை வெளியீட்டு விழாவில் மேடையில் கூறினார் பாரதிராஜா.
இதேபோல், கடந்தமுறை நடந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, ‘வந்தியத்தேவனாக ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதற்கு பின்பே, பொன்னியின் செல்வன் நாவலை தேடி எடுத்து வாசித்தேன், என்று கூறி இருந்தார்.
அதே மேடையில் பேசிய கமல்ஹாசன், ஒருமுறை இதுபற்றி பேசும்போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நீ (கமல்) பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதாக இருந்தால், வந்தியத்தேவனாக ரஜினியை நடிக்க வை, என்று கூறியதாக குறிப்பிட்டார்.
இப்படி திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தகுதியான நபர்களாக ஆசைப்பட்டது ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களைத்தான். ஆனால் அந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் கார்த்தி, ஜெயம் ரவி போன்ற இளைய நடிகர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு, இயக்குநர் மணிரத்னம் மூலம் கிடைத்திருக்கிறது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில், அவர்கள் நடிப்பு இன்னும் சிறப்பாக இருக்குமா, என்பதற்கு பதில் வரும் 28ம் தேதி ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu