/* */

சர்வதேச அரங்கில் அரங்கேறிய கள்ளிக்காட்டு வாழ்க்கை…!

கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு துபாயில் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

சர்வதேச அரங்கில் அரங்கேறிய கள்ளிக்காட்டு வாழ்க்கை…!
X

தமிழ்த் திரையுலகின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை அந்தந்த காலகட்டங்களில் தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கும் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களுக்கும் ரசிகர்களிடையே தனிப்பட்ட வரவேற்பு உண்டு. இதில் காலநிலைக்கு ஏற்ப மாற்றங்களும் ஏற்பட்டு வந்திருப்பதை தமிழ்த் திரைப்பட வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது புரியும்.

அவ்வாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு சில பாடலாசிரியர்கள் கோலோச்சி இருப்பார்கள். இவர்களில் சில பாடலாசிரியர்கள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதோடு மட்டுமே தங்கள் பணியை நிறுத்திக்கொள்வார்கள். சில பாடலாசிரியர்கள் அதையும் தாண்டி, திரைப்படங்களில் கதை, திரைக்கதை, வசனம் என்று தங்கள் களத்தை விரிவாக்கி கவனம் ஈர்ப்பார்கள். மேலும், கவியரங்கம், பட்டிமன்றம், தனியுரை என்றும் இலக்கிய மேடைகளை அலங்கரிப்பதும் உண்டு.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், திரையிலும் அரசியலிலும் மிளிர்ந்த பேரரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக கலைஞரின் பன்முகத் திறமை பலருக்கு முன்னுதாரணமாக வழிகாட்டியதை யாராலும் மறுக்க இயலாது.

அவ்வகையில், கவிஞர் வைரமுத்து ஆயிரமாயிரம் திரைப்படப் பாடல்களை இயற்றி தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, சிறுகதை, நாவல், கவிதைத் தொகுப்புகள் என பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.

அப்படி அவர் எழுதிய நூல்களில் ஒன்றான கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்றதாகும். ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி – உருது – மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது. 'தி சாகா ஆஃப் தி சாக்டஸ் லேண்ட்' என்ற பெயர்கொண்ட அந்த நாவல், துபாயில் 'ரைஸ்' அமைப்பின் சர்வதேச மாநாட்டில் (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. அட்லாண்டிஸ் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டார்கள். மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் நூலின் பிரதி வழங்கப்பட்டது.


நூலை வெளியிட்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "காக்கை பறக்காத எங்கள் கள்ளிக்காட்டு வாழ்க்கை சர்வதேச அரங்கில் அரங்கேறுவது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அரசர்களுக்கும் புராண புருசர்களுக்கும் மட்டுமே இதிகாசம் இதுவரை எழுதப்பட்டிருக்கிறது. முதன் முதலாய் மண்ணின் மகனுக்கு, உழைக்கும் குடிமகனுக்கு, உண்மையாய் வாழ்ந்தவனுக்கு இந்த இதிகாசம் எழுதப்பட்டிருக்கிறது. இது மண்ணுக்கும் மனிதனுக்குமான தீராத போராட்டமாகும். 'எர்னஸ்ட் ஹெமிங்வே' எழுதிய நோபல் பரிசு பெற்ற நூலுக்கு 'கிழவனும் கடலும்' என்று பெயர். நான் எழுதிய இந்த இதிகாசத்தை 'கிழவனும் நிலமும்' என்று சொல்லலாம். இரண்டுமே மானுடத்தின் வெற்றி பற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை உலக வெளிகளில் உலாவிடுகிறேன்" என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், நிறுவனத் தலைவர் ஜெகத் கஸ்பர் மற்றும் சர்வதேச நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

Updated On: 12 Nov 2022 12:36 AM GMT

Related News