கொடைக்கானலில் சட்ட விரோத கட்டிடம்: இரு தமிழ் நடிகர்கள் மீது நடவடிக்கை

கொடைக்கானலில் சட்ட விரோத கட்டிடம்: இரு தமிழ் நடிகர்கள் மீது நடவடிக்கை

நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா.

கொடைக்கானலில் சட்ட விரோத கட்டிடம் கட்டி வருவது தொாடர்பாக இரு தமிழ் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் அரசு விதிகளை மீறி கட்டடங்களை கட்டிய நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் வீடுகளின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல், விதிகளை மீறி பங்களா கட்டிவருவதாக சர்ச்சை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதி மீறி பங்களா கட்டிவருவது குறித்து பேத்துப்பாறை ஊர்த் தலைவர் மகேந்திரன் என்பவர் புகார் அளித்தார்.

வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், நடிகர் பிரகாஷ் ராஜ் 7 ஏக்கரும், பாபி சிம்ஹா ஒரு ஏக்கரும் நிலம் வாங்கியிருந்தனர். அந்த நிலத்தில் நடிகர்கள் இருவரும் விதிகளை மீறி பங்களா கட்டிவருகிறார்கள். மேலும் கட்டட வரைபடம் கொடுத்து முறையான மின் இணைப்பும் பெறவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் பாபி சிம்ஹா, கொடைக்கானல் - பழனி சாலையில், பெருமாள் மலையை அடுத்து உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பேத்துப்பாறையில் எனது பெற்றோருக்காக வீடு கட்டினேன். ஒருகோடியே 70 லட்சம் கொடுத்தேன். இதில் ஒப்பந்ததாரர் என்னை ஏமாற்றிவிட்டார். இந்த விவகாரத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். என்னையும் தடுத்து வருகின்றனர். நான் போலியாக பட்டா வைத்து விதிமுறைகளை மீறி கட்டியதாகவும் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். சரியான ரெக்கார்டுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன என்று குற்றம்சாட்டினார். மேலும் பாபி சிம்ஹா போலீசில் புகாரும் அளித்தார்.

இதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், ஜேசிபி வைத்து கட்டட பணிகளை மேற்கொள்வதாகவும், பொதுப்பாதையை மறித்து சிமென்ட் சாலை அமைத்துள்ளதாகவும் பேத்துப்பாறை ஊர்த் தலைவர் மகேந்திரன் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்த வருவாய்துறை அதிகாரிகள், பொதுப்பாதையை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமிக்கவில்லை என அப்போது விளக்கம் அளித்தனர். அதேநேரம் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டதா இல்லையா என்பது குறித்து எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டுவை சேர்ந்த எஸ்.முகமது ஜூனத் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் போத்துப்பாறை. இந்த கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டி இருக்கிறார்கள். கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின் படி முறையாக அனுமதி வாங்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க கட்டிட விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் பேத்துப்பாறை பகுதியில் பங்களா கட்டி உள்ளார்கள்.

இது தொடர்பாக புகார் அளித்தாலும் இருவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விதிமீறல் கட்டிடங்களால் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் கொடைக்கானல் பேத்துப்பாறையில் அரசின் அனுமதி பெறாமல் ஜெசிபி, பொக்லைன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்திருக்கிறார்கள் எனவே உரிய அரசின் அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று எஸ்.முகமது ஜூனத் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கடந்த மாதம் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், நடிகர் பாபி சிம்ஹா தனது தாயார் பெயரில் 2400 சதுர அடிக்கு கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 4000 சதுர அடி கட்டியிருக்கிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது இரு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர். இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடிகர்கள் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டடங்களின் கட்டுமானபணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினர். கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை வரும் தள்ளி வைத்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். இதில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும் வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அதில், நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் கட்டி வரும் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story