இளையராஜாவின் மகள் பிரபல பின்னணி பாடகி பவதாரிணி காலமானார்
தந்தை இளையராஜாவுடன் பவதாரிணி (கோப்பு படம்)
இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் திரை உலகில் இசைஞானி இளையராஜா இல்லாமல் இசை இல்லை என்று சொல்லலாம்.பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை இளையராஜா பாடல்கள் இல்லாத ஒலிநாடாவே இல்லை என்று கூட சொல்லலாம். அது மட்டும் அல்ல தமிழ் திரை உலக வரலாற்றை எழுத வேண்டும் என்றால் இளையராஜா வருகைக்கு முன் இளையராஜா வருகைக்கு பின் என்று தான் எழுத வேண்டும். அந்த அளவிற்கு அவர் தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.
இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் மற்றும் பவதாரிணி என்ற மகள் உண்டு. 47 வயதான பவதாரிணி சிறந்த பின்னணி பாடகி ஆவார். இவர் பாரதி என்ற படத்தில் பாடிய மயில் போல பொன்னு ஒண்ணு என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்று இருக்கிறார். மேலும் தாமிரபரணி உள்பட பல தமிழ் படங்களிலும் சிறப்பான பாடல்களை பாடி உள்ளார். ராசய்யா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலின் மூலம் தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் இவருக்கு பித்தப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது இதற்காக இலங்கையில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பவதாரிணி இன்று மாலை மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது உடல் இலங்கையில் இருந்து நாளை சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
மகள் மரணச் செய்தி அறிந்ததும் இளையராஜா சோகமாக உள்ளார் இளையராஜாவுக்கு தமிழ் திரை உலக பிரமுகர்களும் முக்கிய பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu