தமிழக அரசின் ஆட்சி நல்லாருக்கு: நடிகர் வடிவேலு

DMK News Tamil -திரைப்படங்களில் கடந்த பத்தாண்டுகளாக நடிகர் வடிவேலு நடிக்கவில்லை. என்றாலும், வயது பேதமின்றி அனைத்துத் தரப்பு ரசிக மனங்களில் நாள்தோறும் ஏதோவொரு திரைப்படக் காட்சியின் மூலம் நெருக்கமாகவே இருந்தார். ஆம். இது வேறெந்த நகைச்சுவை நடிகர்களுக்கும் அமையாத ஆச்சர்யம். ஓராண்டோ அல்லது ஈராண்டோ ஒரு நடிகரின் புதிய படம் திரையில் வரவில்லை என்றால், அவ்வளவுதான் அதோடு அவரை மறந்துவிட்டு வேறொரு நடிகரை கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால், வடிவேலு மட்டும்தான் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆதர்ச நாயகனாக இன்றளவும் ரவுண்டு கட்டி வருகிறார். தற்போது, பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் திரையில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்... நாயகனாக, நகைச்சுவை நடிகனாக. 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'மாமன்னன்', 'சந்திரமுகி-2' என வடிவேலுவின் மறுபிரவேச படப்பட்டியல் தொடங்கியிருக்கிறது.
இந்தநிலையில், நடிகர் வடிவேலு நேற்று(22/09/2022) திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையாகவும் நறுக்குத் தெறித்தாற்போலவும் பதில்களைப் பளிச்சென்று போட்டுடைத்தார்.
அவற்றிலிருந்து சில கேள்விகளும் வடிவேலு அளித்த பதில்களும்….
''இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' எப்படி இருக்கு… உங்கள் கேரக்டர் என்ன?''
''மாரி செல்வராஜ் நல்ல திறமையான இயக்குநர். அவர் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் குணசித்திர வேடத்தில் நடிச்சுட்டு இருக்கேன். படம் அருமையா வந்திருக்கு. அதுல நடிச்சது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.''
''போண்டா மணி உடல் நலமின்றி இருக்கிறாரே..''
''ஆமாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கேள்விப்பட்டேன். அவர் நல்ல மனிதர். அவருக்கு உதவி செய்வேன்.''
''மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா.?''
''இப்ப எதுக்குப்பா அரசியல். முதலில் சினிமாவில் நடிப்போம். மக்களை சிரிக்க வைப்போம். அரசியலை அப்புறம் பார்ப்போம். நம்ம முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா நிறைய நல்லது பண்ணிக்கிட்டு வர்றாரு. தமிழ்நாடு அரசின் ஆட்சி நல்லாருக்கு.'' என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu