கடன் விவகாரம்: நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடன் விவகாரம்: நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் விஷால்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ரூ. 15 கோடி செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

தமிழில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, வெடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, மதுரையை சேர்ந்த அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

இதுசம்பந்தமாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கடனை திருப்பி செலுத்தாமல், உத்தரவாதத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படியும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டு இருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளனர்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags

Next Story