நடிகர் விஷாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

நடிகர் விஷாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஷால் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, வெடி, அவன்-இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், ஏராளமான படங்களையும் தயாரித்தார். இந்த நிலையில், விஷால் பிலிம் பேக்டரி என்ற நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.


அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த உத்தரவை விஷால் மீறி உள்ளதாகவும், தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டி விசாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செளந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் நிறுவன தயாரிப்பில் தற்போது வரை எந்த படங்களையும் தயாரிக்கவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த அவமதிப்பும் இல்லை என தெரிவித்து, லைகாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், விஷால் பட நிறுவனத்திற்கு எதிரான லைகா நிறுவனம் தொடர்ந்த பிரதான வழக்கில் ஜூன் 26 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என கூறி வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture