காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

நடிகர் விமல்
தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல் களவாணி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, அவர் நடித்த பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க நடிகர் விமல் கோபி என்பவரிடம் இருந்து 4 கோடியே 50 லட்சம் கடனாக பெற்றிருந்தாராம். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், அந்த தொகையை காசோலையாக வழங்கி உள்ளார். அந்த காசோலையை கோபி தரப்பினர் வங்கியில் செலுத்திய போது விமல் கணக்கில் இருந்து பணம் இல்லை என்று திரும்பி வந்து உள்ளது. இதையடுத்து நாலரை கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார்.
அதன்பின்னர் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu