நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மீது பணம் மோசடி வழக்கு

நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மீது பணம் மோசடி வழக்கு

கணவர் வீரேந்திர சவுத்ரியுடன்  நடிகை நமீதா.

நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மீது சேலம் சூரமங்கலம் போலீசார் பணம் மோசடி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

பிரபல நடிகை நமீதா தமிழில் ‘ஏய்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னடம் ,இந்தி படங்களிலும் நடித்துள்ளார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கவர்ச்சி நடிகை ஆவார். குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் ரசிகர்களை மச்சான் மச்சான் என அன்புடன் அழைத்து பிரபலம் ஆனவர் நடிகை நமீதா. இவர் பாரதிய ஜனதா கட்சியிலும் பொறுப்பில் உள்ளார். தேர்தல் நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர் வீரேந்திர சவுத்ரி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மத்திய அரசின் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் அமைப்பான எம்.எஸ்.எம்.இ. என்ற அமைப்புக்கு கடன் வழங்குவது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொழிலதிபர்கள் கூட்டத்தை நடத்தி வந்தார்.

இந்த அமைப்பின் மூலம் அவர் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வாங்கி கொடுத்து வந்தார். மேலும் அவர் அந்த அமைப்பின் மாநில தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சேலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு கூட்டம் நடத்தி அங்குள்ள தொழிலதிபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக அவர் மீது கோபால்சாமி என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் போலீசார் தற்போது நமீதாவின் கணவர் வீரேந்தி சவுத்ரி மற்றும் மஞ்சுநாத் என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவருக்கும் கோர்ட்டில் ஆஜராகும்படி சமன் அனுப்பியுள்ளனர். இந்த மோசடி வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story