ஆரம்பமாகும் அரசியல் பயணம்? நடிகர் விஜய்யை சந்திக்க குவிந்த மாணவர்கள்!

ஆரம்பமாகும் அரசியல் பயணம்? நடிகர் விஜய்யை சந்திக்க குவிந்த மாணவர்கள்!
X
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை விஜய் இன்று நேரில் அழைத்து பாராட்டுகிறார். அத்துடன் அவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் அளித்து சிறப்பிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முழுக்க இருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார். அவரது ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தங்களது சொந்த பணத்தில் செய்து வருகின்றனர். இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் எனவும், அதற்கான முன்னோட்டமாகத் தான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளும் வரிசைகட்டும். அதைப்போல அவரது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்வார்கள். இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.

இது அரசியல் முக்கியத்துவம் பெற என்ன காரணம் என்றால், விஜய் தரப்பில் மாவட்ட வாரியாகவோ, கல்வி மாவட்ட வாரியாகவோ மாணவர்களை அழைக்காமல் தொகுதி வாரியாக தமிழகத்திலுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலிருந்தும் தொகுதிக்கு 6 பேர் என மொத்தம் ஆயிரம் பேருக்கும் மேல் விஜய்யை இன்று சந்திக்க இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிப்பதோடு, கல்வி உதவித் தொகையும் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

நீலாங்கரையிலுள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் 1500 பேருக்கும் அதிகமாக மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டிருப்பதால் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. மதியம் பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story