இந்தியில் மீண்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய்..!
ஷாருக்கான் நாயகனாக நடிக்கும், 'ஜவான்' இந்திப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றவிருக்கிறாராம் நடிகர் விஜய்.
HIGHLIGHTS
நடிகர் விஜய் ஏற்கெனவே, பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் 'ரவுடி ரத்தோர்'படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியிருந்தார். இந்தநிலையில் மீண்டும், ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்புகள் எகிறத்தொடங்கியுள்ளன.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் 'ஜவான்'.படத்தில் அவரது நாயகி நயன்தாரா. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. தனது திருமணத்துக்கு முன்பாக புனேவில் நடைபெற்ற படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்று நடித்தார்.
தேன்நிலவுக்கு தாய்லாந்து சென்றுள்ள நயன்தாரா திரும்பி வந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கின்ற நிலையில், 'ஜவான்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாக இந்தி இணையத்தள செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளன. படக்குழுவினர் தீபிகா படுகோனேவிடம் பேசி சம்மதம் பெற்றுவிட்டதாகவும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாகவும் தெரிவிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் 'ஜவான்' படத்தை வெளியிட படத்தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்தி ஆட்டத்தைக் காண அவரது ரசிகர்களிடம் ஆர்வ அலை பொங்குகிறது.