"தமிழக கோழிப்பண்ணைத்தொழிலில் 2 மாதங்களில் ரூ.300 கோடி இழப்பு"

நாமக்கல்லில் நடைபெற்ற கோழிப்பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் பேசினார்.
தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில், கோழிப்பண்ணையாளர்கள் ஆலேசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி, செயலாளர் முரளி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கோழித்தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், சோயாப் புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் முட்டை மற்றும் கோழி விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் தினசரி 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு முட்டைக்கு ரூ.1 வீதம் நாள் ஒன்றுக்கு 5 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதத்தில் கோழிப்பண்ணைத்தொழிலில் ரூ.300 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளை தொடர்ந்து நடத்த முடியால் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இதேநிலை நீடித்தால், பல பண்ணையாளர்கள் தற்கொலை செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முட்டை மற்றும் கோழிகளுக்கு உரிய விலை கிடைக்க பண்ணையாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சங்கம் அறிவிக்கும் விலைக்கு குறைவாக யாரும் விற்பனை செய்யக் கூடாது; வியாபாரிகள் யாராவது விலை குறைத்து கேட்டால் அது குறித்து சங்கத்திற்கு புகார் செய்ய வேண்டும்.
கோழிப்பண்ணைத் தொழில் சம்மந்தப்பட்ட மூலப்பொருட்கள் வியாபாரிகள், தீவன வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், கோழி வியாபாரிகள், முட்டை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் லாபம் ஈட்டுகின்றனர். பண்ணையாளர்களுக்கு மட்டுமே நஷ்டம் ஏற்படுகிறது. முட்டை வியாபாரிகள் ஒரு முட்டை ரூ.3.25க் வாங்கி ரூ.5 முதல் 6 வரை விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டுகின்றனர்.
எனவே பண்ணையாளர்கள் முட்டையை நேரடியாக விற்பனை செய்ய முன்வர வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோன ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு, பண்ணையாளர்கள் வங்கிகளில் கூடுதல் கடன் பெற்றுள்ளனர். தற்போது உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கோழிப்பண்ணைத் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து, வங்கிகளில் 30 சதவீதம் கூடுதல் கடன் வழங்க வேண்டும். இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, பண்ணைகளை மூடினால், மக்காச்சோளம், சோயா, கோதுமை, சோளம், கம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை குறைந்து விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு அதிக அளவில் முட்டை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் கோழிப்பண்ணைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக முட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்புவது குறைந்து வருகிறது. முட்டை ஏற்றுமதியும் கடந்த 2 ஆண்டுகளில் கடுமையாக சரிவடைந்துள்ளது. பல மருந்து கம்பெனிகளின் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.
இதுபோன்ற மருந்துகளை பரிசோதனை செய்வதற்கு உரிய பரிசோதனை மையங்கள் நாமக்கல் பகுதியில் இல்லை. எனவே கால்நடை மருத்துவக்கல்லூரியில் கோழிப்பண்ணை சம்மந்தப்பட்ட மருந்துகளை பரிசோதனை செய்ய உயர்பாதுகாப்பு பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று கூறினார். தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த திரளான கோழிப்பண்ணையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu