உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்
உலக நாடுகள், உக்ரைனுக்கு பலவகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.;
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது ரஷ்யா. குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரனை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உக்ரைனுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க தைவான் அதிபர் சாய் இங் வென் முடிவு செய்துள்ளார். இதேபோல் இந்தியா உணவு, தண்ணீர் ஆகியவற்றுடன் 2 டன் மருந்து பொருட்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது .
உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் நன்கொடை வழங்கியுள்ளார். 95 வயதான இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சிப் பெறுப்பேற்று 70 ஆண்டுகள் ஆவதை இந்த ஆண்டு கொண்டாட உள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு தற்போது பொது மற்றும் அலுவல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ள அவர், உக்ரைன் அகதிகளுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டு உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் குடிபெயரும் மக்களுக்கும், உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் உதவுவதற்காக இந்த அமைப்பு நிதி திரட்டி வருகிறது. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதி போன்றவற்றை இந்த தொண்டு நிறுவனங்கள் அங்குள்ள உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மூலமாக செய்து கொடுத்து வருகின்றன. ராணியின் ஒப்புதலை அடுத்து சுமார் 20 மில்லியன் டாலர்களை லண்டன் அரசாங்கம் நன்கொடையாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உக்ரைன் அகதிகளுக்காக எலிசபெத் ராணி வழங்கியுள்ள நன்கொடை அவருடைய தனிப்பட்ட வருமானத்தில் இருந்து வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.
ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை விதித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு பலவகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கடனுதவி, ஆயுதங்கள், படை வீரர்கள், இணைய வசதி, உணவு, தண்ணீர் என பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.