இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு புதன்கிழமை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Update: 2024-01-31 10:36 GMT

இம்ரான் கான் மற்றும் ஆறது மனைவி புஷ்ரா 

ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அதையடுத்து, வரும் பிப். 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் அவரது திட்டத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு புதன்கிழமை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி 10 ஆண்டுகள் பொதுப் பதவியில் இருப்பதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், 787 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பதவியிழந்தார்.

அதன் பிறகு அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதில், பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருள்களை முறைகேடாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் இம்ரானுக்கு சிறப்பு அமா்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்தச் சூழலில், தனது ரகசியக் காப்புறுதியை மீறியதாகத் தொடரப்பட்டிருந்த வழககில் இம்ரான் கானுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. இந்த நிலையில் தோஷகானா வழக்கிலும் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது இம்ரான் ஆதரவாளா்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News