பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயார்க் கவர்னர் ராஜினாமா

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

Update: 2021-08-11 05:38 GMT

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ

நியூயாா்க் மாகாண கவர்னரும் ஜனநாயகக் கட்சியை சோ்ந்தவருமான ஆண்ட்ரூ குவாமோ, தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பா் முதல் அரசு ஊழியர்கள் உட்பட பலர் குற்றம் சாட்டினர். இதுதொடா்பாக விசாரிக்க நியூயாா்க் அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் விசாரணைக் குழுவை அமைத்தாா்.

அந்தக் குழு அரசு ஊழியா்கள், புகாா் அளித்த பெண்கள் உள்பட 179 பேரிடம் விசாரணை நடத்தியது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட கவர்னரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுமாா் 5 மாதமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் கவர்னர் மீதான குற்றச்சாட்டை அக்குழு உறுதி செய்தது. விசாரணையின்போது, 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள், எஸ்எம்எஸ்.,கள், புகைப்படங்கள் ஆதாரமாக ஆய்வு செய்யப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று தொலைக்காட்சியில் மக்களிடம் பேசிய ஆண்ட்ரூ குவாமோ, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது; பொய்யானது  என குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து நியூயார்க் கவர்னராக, தற்போது துணை கவர்னராக உள்ள கேத்தி ஹோக்கல் பதவியேற்கவுள்ளார். நியூயார்க்  மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக அவர் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News