கேப்ரியல்லா சூறாவளி புயலை தொடர்ந்து நியூசிலாந்தில் நில நடுக்கம்

கேப்ரியல்லா சூறாவளி புயலை தொடர்ந்து நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-02-15 08:12 GMT

நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்து கிடக்கும் காட்சி.

நியூசிலாந்து நாட்டில் கேப்ரில்லா சூறாவளி புயலை தொடர்ந்து இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் மக்கள் தொகை மிகுந்த வட தீவில் நேற்று கேப்ரியல்லா என்ற பெயரில்  சூறாவளி புயல் தாக்கியது. இதனால், 46,000 க்கும் அதிகமான மக்கள்  வீடுகளை இழந்தனர். கட்டங்கள், வீதிகளும் சேதமடைந்தன. புயல் தாக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. இதனை தொடர்ந்து நாட்டில் அவசர சிலை பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் இதற்குமுன் 2019 கிறைஸ்ட்சர்ச் தாக்குதலையடுத்தும்,கோவிட்19 பெருந்தொற்று காரணமாகவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆப் ப்ளென்டி பகுதி, ஓபோடிகி, வகாதனே மாவட்டம், வைகாடோ பகுதி, தேம்ஸ்-கோரமண்டல், ஹவுராக்கி மாவட்டம், வைகாடோ மாவட்டம், தாராருவா மாவட்டம், நேப்பியர் சிட்டி மற்றும் ஹேஸ்டிங்ஸ் மாவட்டம் ஆகியவற்றில் முன்பே உள்ளூர் அளவிலான அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சூறாவளி புயலை முன்னிட்டு குழந்தைகள், முதியவர்கள் உள்பட 2,500 பேரை வேறு இடங்களுக்கு அரசு குடிபெயர செய்து உள்ளது. இதுதவிர, ஹாவ்கே பே பகுதியில் வெள்ள நீர் மற்றும் புயல் பாதிப்பில் சிக்கி தவித்த 9 ஆயிரம் பேர் மீட்டு கொண்டு செல்லப்பட்டனர். இதற்காக 11 ராணுவ வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சூறாவளி தாக்கத்திற்கு பெண்ணின் வீடு மீது வங்கி ஒன்று இடிந்து விழுந்து உள்ளது. இதில் அவர் பலியானார். அந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதுகாப்பு படை, மீட்பு படை மற்றும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள், நூற்றுக்கணக்கானோரை மீட்டனர். சில இடங்களில் வீட்டின் மேற்பகுதி வரை வெள்ளம் உயர்ந்து காணப்பட்டது. இதனால், மக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தேடி சமூக ஊடகத்தில் விவரங்களை பதிவிட்டனர். சூறாவளியை முன்னிட்டு கிழக்கு கடலோர பகுதியில் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பும் என்றும் நாளை (வியாழக் கிழமை) வரை மத்திய நியூசிலாந்து பகுதியில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து வடகிழக்கே 78 கி.மீ. தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. சூறாவளி புயலால் மக்கள் இடம் பெயர்ந்து நிவாரண பகுதிகளில் தங்க வைக்கப்பட்ட நிலையில், காணாமல் போன உறவினர்களையும் தேடி வருகின்றனர். நில நடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் இறந்தவர்களின் விவரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நில நடுக்கம் நியூசிலாந்து நாட்டு மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அது மட்டும் அல்ல. கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பம் போன்ற நில நடுக்கத்தினால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை  மீட்கும் பணி கூட இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. துருக்கி, சிரியா நாட்டு மக்களின் மரண ஓலம் அடங்குவதற்கு முன்பாகவே இன்று நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் அனைத்து நாட்டு மக்களிடமும் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News