பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம்

பலத்த மழையால் ரன்வேயில் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-12-04 07:49 GMT
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது.

பலத்த மழை காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் இன்று இரவு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயலானது நாளை தான் கரையை கடக்கும் என்பதால் சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை தவிர்க்க முடியாத ஒன்று . மழை தொடர்ந்து கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஏற்கனவே பெய்த மழையால் சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல சாலைகளில் கார்கள் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாநகர போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பலத்த மழையால் சூழ்ந்துள்ள வெள்ளத்தின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ரன்வே எனப்படும் ஓடுபாதையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக மற்ற  நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் இன்று இரவு வரை மூடப்படுவதாக விமான நிலைய இயக்குனரகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News