வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2022-11-17 05:10 GMT

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் இருக்கும். இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மழைப்பொழிவின்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது .

மேலும் , கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இரண்டாவது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் வரலாறு காணாத வகையில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் வெள்ளிக்கிழமை சுமார் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கடுமையான வானிலை நிலவும் எனவும்  17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவிலும், நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரைக்கு பகுதியில் கடுமையான வானிலை நிலவும் எனவும் எச்சரித்துள்ளது. .

16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழ்நாடு-புதுச்சேரி பகுதியில் உள்ள கடற்கரையோரங்களில் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News