திடீர் - சூறாவளி மழை காற்றால் 1,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாறுமாறாக முறிந்து வீழ்ந்த சேதம்! விவசாயத்தில் பேரிழப்பு
மழையால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்தன, கூரைகள் பறந்தன, விவசாய பயிர்கள் சேதமடைந்தன.;
சூறாவளியுடன் கனமழை: 1,000க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்! மரங்கள் முறிந்து வீழ்ந்த பரிதாபம் :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள சென்னம்பட்டி, கிட்டம்பட்டி, சனிச்சந்தை, ஜரத்தல், குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்தன, கூரைகள் பறந்தன, விவசாய பயிர்கள் சேதமடைந்தன. பாப்பாத்திக்காட்டுப்புதூர் பகுதியில் வெத்தலைக்காரன் தோட்டத்தில் உள்ள இந்திராணியின் குடிசை வீட்டின் கூரை காற்றில் பறந்து கீழே விழுந்தது.
திருமுருகன் தோட்டத்தில் தென்னை மரங்கள் மற்றும் விஸ்வநாதன் தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகள் வேருடன் சாய்ந்தன. அதேபோல், கதிர்வேல் தோட்டத்தில் 150 செவ்வாழை மரங்கள், பெருமாள் தோட்டத்தில் 500 நேந்திரன் வாழைகள் முறிந்து சேதமடைந்தன. சென்னம்பட்டி சுற்றுவட்டாரத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்.
இதேசமயம், கடம்பூர் சுற்று பகுதிகளில் மதியம் 2.30 மணி முதல் 4.00 மணி வரை இடைவெளி விடாமல் சூறாவளி மழை தொடர்ந்து பெய்தது. இருட்டிபாளையம்–ஜீவா நகர் பகுதியில் இரு இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்ததால், போக்குவரத்து ஒரு மணி நேரம் முடங்கியது. பின்னர் மாலை 5 மணிக்கு அப்பகுதி மக்கள் உதவியுடன் மரங்கள் அகற்றப்பட்டன.