குடிநீர் பற்றாக்குறை - பெண்கள் சாலை மறியல்

Update: 2021-04-13 01:36 GMT

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் தலை மதகு கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் அமைந்துள்ளது. மேலும் லோயர் கேம்பில் இருந்து கம்பம், தேவாரம், பண்ணைபுரம், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி கூடலூர் 1வது வார்டு பகுதி பொது மக்களும் 20 வது வார்டு பகுதி பொதுமக்களும் இன்று திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த கூடலூர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் எட்டு நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்குவதாகவும், முறையாக குடிநீர் வருவதில்லை எனவும் போலீசாரிடம் பொதுமக்கள் கூறினார். இதனை அடுத்து கூடலூர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து கூடலூர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து மறியலில் ஈடுபடாமல் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News