கேரளாவில் பந்த்: தமிழக தொழிலாளர்கள் அவதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் வேலை நிறுத்த போராட்டம். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக தொழிலாளர்கள் அவதி.

Update: 2021-03-02 07:01 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பலவித போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கேரளாவில் அனைத்து கட்சிகள் மற்றும் தொழில் சங்கங்களின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெறும் இந்த போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார், ஜீப்கள் இயக்கப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட எல்லையான குமுளியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு காணப்பட்டது. அரசு, தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதே போன்று மாவட்டத்தில் உள்ள மற்ற இரு வழித்தடங்களான போடி மெட்டு மற்றும் கம்பம் மெட்டு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Similar News