கோவில் திருவிழாக்கள் தடை - மல்லிகை பூக்கள் விலை குறைவு

Update: 2021-04-13 10:30 GMT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் கொரோனா நோய்த் தொற்றால் கோவில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டதால் மல்லிகை பூக்கள் விலை குறைந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கன்னியப்பிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, தெப்பம்பட்டி, ராஜதானி, டி.ராஜகோபாலன்பட்டி, திம்மரசநாயக்கனூர், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூக்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி நகரில் செயல்படும் தினசரி பூ மார்க்கெட் மூலம் உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனையாகின்றன.

தற்போது கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்ததுடன் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன் காரணமாக பூக்கள் விலை கடும் சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் வரையில் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை பூக்கள் தற்போது ரூ.100 முதல் 180 ஆக குறைந்து விட்டது.

பூக்கள் வரத்து ஓரளவு அதிகமாக இருந்தாலும் கோவில் விழாக்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மல்லிகை பூக்களை போலவே சம்பங்கி, ரோஜா, கோழிக்கொண்டை, அரளி உள்ளிட்ட பூக்களின் விலையும் சரிந்தே காணப்படுகிறது. போதுமான விலை இல்லாததால் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும் திருவிழாக்கள், பண்டிகைகள் தடை செய்யப்பட்டுள்ளதாலும் போதுமான மொத்த விற்பனை இல்லாததால் வியாபாரிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News