பொள்ளாச்சி பகுதியில் புலி நடமாட்டத்தால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது

பொள்ளாச்சி பகுதியில் புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் நிம்மதியாக நடமாட முடியாமல் முடங்கியுள்ளனர்

Update: 2021-10-27 16:15 GMT

புலியின் நடமாட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே வனத்தை ஒட்டிய பகுதியில் புலி நடமாட்டத்தை கண்டு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் புலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளும், இருவாட்சி போன்ற அரிய வகை பறவைகளும் அதிக அளவில் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பல இடங்களில் உள்ள வன கிராமங்களில் மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர். வனத்தை ஒட்டிய சர்க்கார்பதி, சின்னார்பதி, தம்மம்பதி, சேத்துமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கிராம மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்திற்குள் இருந்து யானைகள், புலி ஆகிய விலங்குகள் அவ்வப்போது வனத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடுவது உண்டு. அவ்வாறு செல்லும் விலங்குகளால் பயிர் சேதங்கள் மட்டுமின்றி அவ்வப்போது உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடையில் இருந்து சர்க்கார்பதி செல்லும் வழியில் வனப்பகுதிக்குள் இருந்து புலி ஒன்று ரோட்டைக் கடந்து சென்றது. இதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமத்திற்குள் புகுந்துள்ள புலியால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்தப் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News