மதுரை: சாதி சான்றிதழ் வழங்க பழங்குடியின மக்கள் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் குலமங்கலம் மகாலட்சுமி நகர் பகுதி பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ், அடிப்படை வசதிகள் வழங்கக் கோரிக்கை

Update: 2021-11-24 14:30 GMT

மதுரை மாவட்டம் குலமங்கலம் மகாலட்சுமி நகர் பகுதி பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ், அடிப்படை வசதிகள் வழங்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், வடக்கு தாலுகா, குலமங்கலம் மகாலட்சுமி நகர் பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்து காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில குழந்தைகளைத் தவிர மற்ற சுமார் 70 சதவீதத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இன்றளவும் கிடைக்காமல்  உள்ளது.

இதனால், இந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆரம்பக்கல்வி மற்றும் படித்து முடித்துவிட்டு, பின் உயர்நிலைக் கல்வி படிக்க முடியாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சாதி சான்றிதழ் பெறுவதற்காக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தியும், இன்றளவும் தங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் இருப்பதாக தெரிவிக்கும் அவர்கள், தங்களின் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சாதி சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி எங்களது குல தொழிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படுகிறது' எனக்கூறும் பழங்குடி இனத்தை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூக மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் தங்களுக்கு விரைந்து சாதி சான்றிதழ் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதி சான்றிதழ் தேவை என்பதுடன் சேர்த்து, 'நாங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. அடிப்படை தேவைக்குக்கூட குடிநீரின்றி தவித்து வருகிறோம். ஆகவே உரிய குடிநீர் வசதி செய்தி தரவும். மட்டுமன்றி மயான வசதியும் எங்கள் பகுதியில் இல்லை.

\எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வது மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தற்போது வசிக்கும் மகாலட்சுமி நகர் பகுதியில் பலருக்கு, சொந்த வீட்டு மனையும் இல்லை. ஆகவே இலவச பட்டா வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இது குறித்து அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியிடம்  கேட்டபோது, விரைவில் இந்த மக்களுக்கு சாதி சான்றிதழ், குடிநீர் வசதி, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Tags:    

Similar News