மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் 67 சவரன் தங்க நகைகள் மாயம்
மதுரை சிம்மக்கல்லில் தனியார் நிறுவனத்தின் 67 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
நகை மாயமானதாக கூறப்படும் அடகுக்கடை
மதுரை சிம்மக்கல், மணி நகரம் வா.உ.சி தெருவில் சாஸ்வதி நிதி லிமிடெட் எனும் பெயரில் தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுரையை சேர்ந்த தொழிலதிபர் வரதராஜன் என்பவர், இங்கு தனது 67 சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரதராஜன் குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதை திரும்ப கேட்டுள்ளார்.
அப்போதும் நிதி நிறுவன ஊழியர்கள் வரதராஜன் லாக்கரில் இருந்த நகைகளை எடுக்கச் சென்றனர். ஆனால், அங்கு நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவன மேலாளர் நிர்மலாதேவி, 67 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து திலகர் திடல் காவல்.நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனியார் நிதி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர், இரண்டு நாட்களாக மாயமாகி இருப்பதும் நிதி நிறுவனத்தின் தங்க நகைகளை எடுத்தல், சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அவர் செய்து வந்ததும் தெரியவந்தது. நிதி நிறுவன ஊழியர் காளிதாசை, காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.