போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு: மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Update: 2021-12-10 03:57 GMT

பைல் படம்.

மதுரையில் போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்,  எனது மகன் சரவணக்குமார் விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர் .

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் எனது மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிப்ரவரி 23ஆம் தேதி சரவணகுமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் அடுத்தநாளே உயிரிழந்தார் .

இந்நிலையில் போலீசார் தாக்கியதே அவரது உயிரிழப்புக்கு காரணம் எனவே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துறை, ஜெயச்சந்திரன்  போலீசார் மனித உரிமை மீறல் செயலுக்காக சரவணகுமாரின் மனைவி கலைவாணிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக ஒரு மாத காலத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளர் காஞ்சனா தேவி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பரிந்துரை செய்துள்ளார்.

Tags:    

Similar News