வீட்டிற்கே நேரடியாகச் சென்று கற்பித்தல் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு
பள்ளி முடிவடைந்ததற்குப் பிறகு திங்கள் முதல் வெள்ளி வரையான 5 நாட்களில் இந்தக் கல்வி புகட்டும் திட்டம் செயல்படும்;
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவருக்கு கல்விக்கடனுதவி வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன். உடன் அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை எம்பி. வெங்கடேசன்
மதுரையில் இன்று மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் முன்னிலையில் நடைபெற்ற கல்விக்கடனுக்கான சிறப்பு கடனுதவி முகாமில் மாணவருக்கு கல்விக்கடனை அமைச்சர்கள் பி. மூர்த்தி, எம்பி. சுவெங்கடேசன், நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கூறியதாவது: நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளின் கல்வி கற்றல் சிக்கல் குறித்து என்னிடம் கூறியிருந்தார்கள். இதுகுறித்து தமிழக அரசின் பொருளாரதார ஆலோசனைக்குழுவும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தனர். இதனைக் கருத்திற் கொண்டு 'வீட்டிற்கே நேரடியாகச் சென்று கற்பித்தல்' திட்டத்திற்காக ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தேன்.
தொடர் கற்பித்தல் இன்மை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கணக்கெடுத்து அவர்களின் இருப்பிடத்திற்கே தன்னார்வலர்கள் மாலை நேரங்களில் சென்று கல்வி கற்பிக்கும் முறையை ஊக்குவிக்கிறோம். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் இந்த முறை இயங்கும் என அறிவிப்புச் செய்திருந்தேன். இந்தத் திட்டம் பலமுறை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 லட்சம் மாணவர்கள் கணக்கெடுக்கப் பட்டுள்ளனர். இதற்கு ஒன்றரை லட்சம் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்தக் கல்வியாண்டிற்குள் இதனைச் செயல்படுத்த முடிவெடுத்து, தமிழகத்திலுள்ள 8 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டு 9ஆவது மாவட்டமாக மதுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. பள்ளி முடிவடைந்ததற்குப் பிறகு திங்கள் முதல் வெள்ளி வரையான 5 நாட்களில் இந்தக் கல்வி புகட்டும் திட்டம் செயல்படும். கரோனா காலத்திற்கு முன்பிருந்த கல்வி கற்றல் திறனை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதுதான் இதன் நோக்கம். இது உலகளாவிய சிக்கல் என்பதால், இதுபோன்ற நடைமுறையை எல்லா நாடுகளிலும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.சில பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களாகவும், குழந்தைத் திருமணங்களுக்கும் மாணவர்கள் ஆளாகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
சு.வெங்கடேசன் எம்பி பேசியது: இதுவரை மதுரையில் மட்டும் ஏறக்குறைய 60 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கல்விக் கடன் மேளாவில் யூனியன் வங்கி மட்டும் 19 மாணவர்களுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை உடனடி கல்விக்கடனாக வழங்கியுள்ளது. உயர்கல்வி வாய்ப்பை இழக்கின்ற மாணவர்கள் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற லட்சியத்தோடு இந்த கல்விக் கடன் மேளா மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் இந்தியா முழுவதும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு கல்விக் கடன் அதிகமாகப் பெற்ற தமிழக மாவட்டமாக மதுரை திகழும் என்ற லட்சியத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
தாய் தந்தையர் வாங்கிய கடனை கல்விக் கடனுக்காக தகுதியாகக் கொள்ளக்கூடாது என்பதை அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக் கடன் வழங்காமல் நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் மனுக்களைத்தான் நாங்கள் ஆய்வுக்கே எடுத்துக் கொள்கிறோம். அதில் நியாயமான காரணங்கள் இருப்பின் உடனடியாக அந்த மனுவை ஏற்று மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க உத்தரவாதம் அளித்து வருகிறோம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே இதுவரை பெருமளவு கல்விக் கடன்களை வழங்கியுள்ளன. பிற வங்கிகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் கூறுகையில், கல்விக்கடனுக்கான சிறப்பு உதவி மையம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்குகிறது. இதில் இதுவரை 25 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.