காதல் தம்பதி தற்கொலை முயற்சி- மனைவி பலி

Update: 2021-04-14 06:30 GMT

மதுரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் மனைவி உயிரிழந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை ஜீவா நகர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் தெருவில் கடந்த 5 மாதமாக வசித்து வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) , உமாதேவி(20) என்கிற இளம் தம்பதி கடந்த 1 வருடத்திற்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் நள்ளிரவில் உமாதேவி தூக்குமாட்டி இறந்துள்ளார்.

அதனை கண்ட அவரது கணவர் பாலகிருஷ்ணன் காதல் மனைவி மறைந்த சோகத்தில் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல்அறிந்து சம்பவ இடம் வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் இறந்த உமாதேவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இருவரும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், உமாதேவிக்கு 16 வயது நடக்கும் போது திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின் அந்த பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய பின்னர் மீண்டும் இருவீட்டார்களையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டு மதுரைக்கு வந்து பாலகிருஷ்ணன் கார்பெண்டர் ஆகவும், உமாதேவி பேன்சி ஸ்டோரில் பணியாற்றி வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில தினங்களாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News