மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

Update: 2021-01-28 09:49 GMT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தெப்பத் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தெப்பக்குளத்தை வலம் வந்த மீனாட்சியம்மன் மற்றும் சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டில் தெப்பத் திருவிழா ஜனவரி 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத் திருவிழா உற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி-அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது.

இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்தில் அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமியும் எழுந்தருளி கோவிலிலிருந்து புறப்பாடாகினர். நான்கு சித்திரை வீதிகள் சுற்றி கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி - அம்மனுக்கு, மங்கள வாத்தியங்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தெப்பக்குளத்தை இருமுறை வலம் வந்து, தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.தெப்பக்குளத்தை வலம் வந்த சுவாமி-அம்மனை ஏராளமானோர் திரண்டு தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News