WTC FINAL இந்தியா அதிர்ச்சி தோல்வி! தட்டி தூக்கிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சீக்கிரமாக ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்துள்ளது.;
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. சரியான திட்டமிடல் இல்லாததால் படுதோல்வியடைந்து 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் தவிக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி.
நியூசிலாந்து அணியிடம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்த இந்திய அணி, இப்போது ஆஸ்திரேலியாவுடன் தோற்று அவர்களிடமும் கோப்பையை பறிகொடுத்துள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகள் எதையும் வெல்லமுடியாத அணியாக இந்திய அணியின் பரிதாபம் தொடர்கிறது.
லண்டனில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக கூறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் அபாரமான ஆட்டம் ஆடி சதம் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.
டாப் வரிசை வீரர்களில் முதிர்ச்சியற்ற ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, ரஹானே 89 ரன்கள், ஷர்துல் 51 ரன்கள் எடுக்க ஆறுதலாக 296 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்களை வேகமாக எடுத்து 4ம் நாள் ஆட்டத்தில் டிக்ளேர் கொடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியது. 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, குறைந்தபட்சம் டிரா செய்யவாவது முயற்சி செய்யும் என பார்த்தால் கடைசி நாளான இன்று கடகட என விக்கெட்டுகளை இழக்க, 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையைத் தவறவிட்டது.