ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோ,டேவிட் மலான் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

Update: 2021-09-12 03:09 GMT

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), 20 ஓவர் கிரிக்கெட் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் சொந்த காரணங்களுக்காக வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சிய ஐ.பி.எல்.-ல் விளையாடவில்லை என்று அவர்கள் கூறினாலும், அமீரகத்தில் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவு காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் என கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி தெரிவித்தார். ஆரம்பத்தில் இத்தகைய தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் பயிற்சி குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது முடிவை மாற்றிக்கொண்டது.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் உள்ள இந்த 3 வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் ஒதுங்கிய நிலையில், மேலும் 3 முன்னணி வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து பின்வாங்கி இருப்பது சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News