முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்: கேப்டன் ரோஹித் உற்சாகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Update: 2022-05-01 02:58 GMT

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் 2022 தொடரின் 44வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 67 ரன்களும், அஸ்வின் 21 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (2) மற்றும் இஷான் கிஷன் (26) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், சூர்யகுமார் யாதவ் (51), திலக் வர்மா (35) மற்றும் டிம் டேவிட் (20*) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 19.2 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், எங்களிடம் இருந்து உண்மையான ஆட்டம் இந்த போட்டியில் தான் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் மிகச்  சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள் வைத்து கொண்டோம். அடுத்தடுத்த விக்கெட்டுகள் எடுத்து கொண்டே இருந்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும், அதை நாங்கள் இந்த போட்டியில் மிக சிறப்பாக செய்துள்ளோம். இந்த தொடரில் நாங்கள் பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், எந்த அணியும் எங்களை மிக இலகுவாக வீழ்த்திவிடவில்லை. சரியான ஆடும் லெவனை தேர்வு செய்ய பல மாற்றங்கள் செய்து பார்த்தோம், ஆனால் கடந்த போட்டிகளிலும் எதுவும் எங்களுக்கு பயனளிக்கவில்லை. பந்துவீச்சாளர்களை போன்று பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தனர் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News