Ind vs Wi T20 சூர்யகுமார் அதிரடியால் இந்திய அணி சூப்பர் வெற்றி!
Ind vs Wi T20 தொடரின் 3வது போட்டியில் சூர்ய குமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.;
இந்திய வீரர் சூர்ய குமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணியும், இந்த போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடலாம் என்கிற சூழலில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பலப்பரிட்சை செய்தன.
டாஸ் இந்த ஆட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்பட்ட நிலையில், டாஸை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டமும் அவ்வளவுதான் என நினைத்தனர்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து அசத்தினர். ஆனாலும் குறைந்த பந்துகளில் இதனை எட்டத் தவறியதால் இந்திய அணிக்கு நம்பிக்கை இருந்தது. விக்கெட்டுகளை விரைவாக எடுக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் வியூகம் வகுக்க, அவரது வியூகத்துக்கு வீழ்ந்தது விக்கெட்டுகள்.
மேயர்ஸ் 25 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, ஜான்சன் 12 ரன்னிலும், பூரன் 20 ரன்னிலும் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் சுழலில் 3 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரன்டன் கிங் மட்டும் நிலைத்து நின்று ஆடி 42 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்த ஆட்டம் அவ்வளவுதான் என எண்ணியிருந்த இந்திய அணி ரசிகர்கள், முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அவுட் ஆக போச்சு என்று முடிவுக்கு வந்துவிட்டனர்.
அடுத்து சுப்மன் கில் 6 ரன்களில் அவுட் ஆக, சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி பவுலர்களை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். தனது பங்குக்கு 4 சிக்ஸர்களையும் 10 பவுண்டரிகளையும் விளாசி, மொத்தம் 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இந்திய அணியின் இலக்கு குறைந்து கொண்டே வந்தது. இந்திய அணிக்காக 20 ஓவர்கள் போட்டியில் 100 சிக்ஸர்கள் விளாசிய 3வது வீரராக சாதனையை பதிவு செய்தார் சூர்யகுமார்.
இந்திய அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக எட்டியது. திலக் வர்மா 49 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அடுத்த போட்டி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி அமெரிக்காவிலுள்ள லாடெர்ஹில்லில் நடக்க இருக்கிறது. இதில் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் இருக்கிறது.