Dunith Wellalage யார் இந்த 20 வயது இளைஞர்? திணறிய இந்திய டாப் ஆர்டர்!
துனித் வெல்லாலகேவின் அட்டகாசமான ஆட்டம் இதுதான்!;
ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்று போட்டியில், துனித் வெல்லாலகேவின் அதிரடி பந்துவீச்சில் இந்திய அணி தனது டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை இழந்து வாடியது. அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
தனது முதல் பந்திலேயே இந்தியஅணியைத் திணற வைத்த இந்த இளைஞர் துனித் வெல்லாலகேவுக்கு வயதோ 20 தானாம். மிக இளம் வயதில் களமிறங்கி மிகப் பெரிய ஜாம்பவான் வீரர்களையே வீழ்த்தியிருக்கிறாரே என உலகம் முழுக்க அவர்தான் டிரெண்டிங்கில் இருக்கிறார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா (53 ரன்), இஷான் கிஷன் (33 ரன்), லோகேஷ் ராகுல் (39 ரன்), அக்ஷர் பட்டேல் (26 ரன்) ஆகியோர் அணியின் ஸ்கோருக்கு காரணமாக இருந்தனர். ஆனால் இவர்களை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் பார்த்ததில் துனித் வெல்லாலகேவுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.
இலங்கை அணிக்காக துனித் வெல்லாலகே 10 ஓவர்களில் 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் அடங்குவர். பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்த 3 பேரும் மிகப் பெரிய இன்னிங்ஸ் ஆடியதுதான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதிலும் விராட் கோலி, கே எல் ராகுல் இருவரும் சதமடித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களையே கதிகலங்க வைத்திருந்தனர்.
முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் மற்றும் அகிலா தனஞ்ஜெயா ஆகியோருக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது இலங்கை பௌலரானார் பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே.
20 வயதான துனித் வெல்லாலகே, 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில், சதம் அடித்த இலங்கை அணியின் முதல் கேப்டன் இவரே ஆவார். இந்த தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும், 2 முறை ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருந்தார்.
இந்த ஆட்டத்தில் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சு, அவரது திறமையை மீண்டும் நிரூபித்தது. இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர், இலங்கைக்கு வெற்றியை பெற்றுத் தர முடியாவிட்டாலும், அவரின் போராட்டத்துக்கு மக்கள் தங்கள் இதயங்களில் இடம் வழங்கியிருந்தனர்.