தனது தேசிய சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

சுவீடனில் நடைபெற்ற போட்டியில், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரத்திற்கு வீசி தனது தேசிய சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்

Update: 2022-07-01 05:09 GMT

கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், தனது தேசிய சாதனையை ஒரு மாதத்திற்குள் மீண்டும் முறியடித்து சாதனை படைத்துள்ளார். தனது முதல் வாய்ப்பில் 89.94 மீட்டர் தூரத்திற்கு வீசி இந்த சாதனையை படைத்தார்.

அடுத்த ஐந்து வாய்ப்புகளில் 84.37மீ, 87.46மீ, 84.77மீ, 86.67மீ, 86.84மீ என வீசி அசத்தியிருந்தாலும் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

கிரெனடா நாட்டைச் சேர்ந்தவரும், உலக சாம்பியனுமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 93.07 மீட்டர் தூரத்திற்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக, பின்லாந்தில் நடைபெற்ற மற்றொரு தொடரான குர்டோன் விளையாட்டு போட்டியில், நீரஜ் 86.69 மீட்டருக்கு எறிந்து தங்கத்தை வென்றார்.

கடந்த ஜுன் 14ஆம் தேதி பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி விளையாட்டுகளில் 89.30 மீட்டருக்கு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அந்த போட்டியிலும் தனது முந்தைய தேசிய சாதனையை நீரஜ் முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய தேசிய சாதனை குறித்து நீரஜ் கூறுகையில்,"என்னுடைய முதல் வாயப்பிற்கு பின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 90 மீட்டரை எட்டிவிடலாம் என்றும நினைத்தேன்.. இந்தாண்டு அதிக போட்டிகளில் பங்கெடுப்பதால் நிச்சயம் அதை எட்டிவிடுவேன்.தற்போது 90 மீட்டருக்கு நெருக்கமாக வந்திருக்கிறேன். நிச்சயம் இந்தாண்டு அதை அடைந்துவிடுவேன்" என்றார்.

Tags:    

Similar News