ஆஸி.-இந்தியா டி20 போட்டி ;கோப்பை வென்று உலக சாதனை படைத்தது இந்திய அணி

ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்தில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, கோப்பையை வென்றது.;

Update: 2022-09-26 03:28 GMT

சாம்பியன் கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றிரவு, ஐதராபாத்தில் நடந்தது. ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த, 2வது போட்டி, மழை பாதிப்பு காரணமாக, 8 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதலில், பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். ஒருபுறம் பின்ச் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறமோ கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 52 ரன்னில் அவுட்டானார். பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியை, டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் (54) உதவியுடன் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

அதிவேக அரைசதம்:

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் கிரீன், 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் (18 பந்துகள்) உள்ளனர். அதே போல் வார்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருமுறை 19 பந்துகளில் அரைசதம் அடித்து முதல் இரண்டு இடங்களிலும் உள்ளார். தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ள கேமரூன் கிரீன் வார்னர் உடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில், அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர்குமார், சாஹல் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்ததால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், தனது அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 69 (36 பந்துகளில்) ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில், தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

களத்தில் அடுத்து இணைந்த விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி வேகமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். வெற்றிபெற கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவைப்பட்டநிலையில், விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்த நிலையில், (47 பந்துகளில், 63 ரன்கள்) அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து, அவுட் ஆனதால் ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, கடைசி ஓவரில் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, 187 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி, கோப்பையை வென்றது.

நேற்றைய போட்டியில் சிறந்த ஆட்ட நாயகனாக சூரியகுமார் யாதவும், தொடரின் நாயகனாக, அக்சர் படேல் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதிக வெற்றிகளை பெற்று உலக சாதனை

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. நேற்றைய வெற்றி, இந்த ஆண்டில் இந்திய அணியின் 21-வது சர்வதேச டி20 போட்டி  வெற்றியாகும். இதற்கு முந்தைய நாக்பூரில் நடந்த போட்டியில் கிடைத்த வெற்றியால், இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தானின் உலக சாதனையை, சமன் செய்தது.

பாகிஸ்தான் அணி,  டி20 போட்டிகளில், ஒரு ஆண்டில் 20 வெற்றிகளை பெற்று, அதிக டி20 வெற்றிகளை  பெற்ற அணியாக, முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த ஆண்டு விளையாடிய 28,  டி20 போட்டிகளில், இந்திய அணி நேற்று, 21-வது வெற்றியை பெற்றது  குறிப்பிடத்தக்கது.

Similar News