கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி தொடக்கம்: டெல்லி அணி வெற்றி

கோவில்பட்டியில் 12 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் டெல்லி வெற்றி பெற்றது.

Update: 2023-05-18 14:42 GMT

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டியை தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் ராமசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் இன்று தொடங்யது. மே 28 ஆம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகிறது.

11 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நான்கு பிரிவுகளாக பிரித்து இந்தப் போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவைத்த தொடர்ந்து முதல் போட்டியை தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் ராமசாமி துவக்கி வைத்தார்.


தொடக்க விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் சண்முகவேல், கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சங்கரநாராயணன், நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன் மற்றும் இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வழக்கறிஞர் சம்பத்குமார், மற்றும் ஹாக்கி வீரர்கள், ஹாக்கி ரசிகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முதல் லீக் போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின. 7 ஆவது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் பிரவிந்தர் சிங் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

21 ஆவது நிமிடத்தில் மும்பை யூனியன் பேங்க் அணி வீரர் வினோத் ஷைனி பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டார். 29 ஆவது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் ராயூஷன் குமார் ஒரு பீல்டு கோல் போட்டார்.

59 ஆவது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் சந்தன் சிங் பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டார். இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்றது. ஹசன் அலி மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

Tags:    

Similar News