துன்பம்போக்கும் சனிமஹாபிரதோஷம்

சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும்.

Update: 2022-01-15 01:45 GMT
பைல் படம்.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும்.

சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.  சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . "ஓம் ஆம் ஹவும் சவும் " என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். . ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும். கொரோனா காரணமாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனபதால் வீட்டிலிருந்தே சிவ பெருமானை மனதில் நினைத்தபடி வழிபடலாம்.

Tags:    

Similar News