அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக நிர்வாகி முக்கிய அறிவிப்பு

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக நிர்வாகி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Update: 2023-12-17 14:03 GMT

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் தான் அன்றைய தினம் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்டநாட்கள் சட்டபோராட்டம் நடந்தது. இதையடுத்து 2019ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பணிகள் விரைவாக தொடங்கின. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டிடக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. . மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் பிரமாண்டமாக அமைய உள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டு வருகிற. பழமை மாறாமல் பக்தர்களை கவரும் வகையில் சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான தூண்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர 3 ஆயிரம் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த விழாவுக்கு படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்

ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்கள் வர வேண்டாம். மாறாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உங்கள் அருகே உள்ள கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். ஏனென்றால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அயோத்தியில் உறுதி செய்வதில் சிரமம் உள்ளது. இங்கு தங்கும் அறைகள் கிடைக்காவிட்டால் கஷ்டமாகி விடும்.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய சூழலில் கோவில் கருவறை, அதில் நிறுவப்படும் சிலை தயாராக உள்ளது. ஆனாலும் ஏராளமான பக்தர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் கோவில் வளாகம் என்பது இன்னும் தயாராகவில்லை. அதோடு கோவில் பணிகள் என்பது முழுவதுமாக முடியவில்லை. இந்த பணிகள் முடிய 2 ஆண்டுகள் வரை ஆகும். இதனால் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் ‛ஆனந்த் மஹோத்சவ்’ கொண்டாட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News