சனிபகவானிடம் இருந்து தப்பிக்க என்ன வழி?

அனுமனை வணங்கினால் சனிபகவானின் தாக்கத்தில் இருந்து தப்பலாம்.;

Update: 2024-03-02 15:54 GMT

சனி பகவான் - கோப்புப்படம் 

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை. சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்க்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும்.

ஏழரை சனி, மற்றும் சனி மஹாதிசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் காலங்களாகும். ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் ஆட்டிபடைப்பார் என்ற கருத்தானது தவறானது ஆகும். ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொருத்ததாகும்.

சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ, ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத் தரும்.

ஒரு மனிதனுக்கு ஜாதக்கப்படி சனி பகவானின் தாக்கம் இருக்கும் போது, அவர் அனுமானை வணங்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இறைவன் அனுமன், ‘சங்கட மோச்சன்' என்று அழைக்கப்படுகின்றார். ஏனென்றால் அவர் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

சங்கடம் என்பதன் மொழியாக்கம், தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் என்பதாகும். இறைவன், அனுமன் குழந்தையாக இருந்த போது சூரியனை சுவையானப் பழம் என்றுத் தவறாகக் கருதி, பிடித்து சாப்பிட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சூரிய பகவான், தேவர்களின் தலைவனான இந்திரனை அணுகினார். இந்திரன் தன் வஜ்ஜிராஸ்த்திரத்தால் குழந்தை அனுமனைத் தாக்கினார்.

இதனால் குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே அனுமன் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள காரணமாகும். இறைவன் அனுமன் மிகுந்த ஆற்றல் மிக்கவராக இருந்தாலும், எப்பொழுதும் பணிவானவர். அவர் சூரிய பகவானிடம் தன்னை மாணவராக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினார்.

அதற்கு சூரிய பகவானோ, தான் நாள் முழுவதும் வானத்தில் பயணிக்க வேண்டி இருப்பதால், எப்பொழுதும் ஓய்வின்றி இருப்பதாகக் கூறினார். அதற்குத் தீர்வாக, இறைவன் அனுமன், சூரியன் பகவானின் தேரின் முன் பக்கம் அமர்ந்து, அது வானெங்கும் பறக்கும் போது, தானும் உடன் பயணிக்கத் தொடங்கினார்.

அவர் சூரிய பகவானுக்கு முதுகுப் புறத்தைக் காட்டியபடி பயணித்தார். மேலும் இறைவன் சூரியனிடமிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டார்.

இறைவன் அனுமன், தனது கல்வியைக் கற்று முடித்த பிறகு, குருவான சூரிய பகவானிடம், குருதட்சணையாக அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார். ஆனால் அனுமன் வற்புறுத்தவே, பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு அனுமானைக் கேட்டுக் கொண்டார்.

அனுமன் சனி லோகத்திற்கு சென்று, சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சனி தேவனோ கோபம் கொண்டு, இறைவன் அனுமானின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் கொண்டு, அனுமானைத் தாக்க முயற்சித்தார்.

இறைவன் அனுமன் தனது உருவத்தை மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ளத் தொடங்கினார். அவர் மிகப்பெரிய உருவமாக ஆன பிறகு, தோளிலிருந்த சனி பகவான் மேற்கூரையில் இடித்துக் கொண்டு நசுங்கினார்.

அது அவருக்கு அளவில்லாத வலியை ஏற்படுத்தியது. யாராலும் தப்பிக்க முடியாததாகக் கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்தது. அவர் இறைவன் அனுமனிடம் மன்னிப்புக் கோரி, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை என்ற வரத்தை அளித்தார். இதனால் தான் சனிபகவானின் தாக்கத்தில் இருந்து தப்ப அனுமனை வழிபட வேண்டும் என்ற பக்தி நடைமுறை உருவானது.

Tags:    

Similar News