மாம்பழம் சாப்பிட மட்டும் அல்ல முக அழகிற்கும் பயன்படும் என தெரியுமா?

மாம்பழம் சாப்பிட மட்டும் அல்ல முக அழகிற்கும் எப்படி பயன்படும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Update: 2024-06-26 14:30 GMT

முக்கனிகளில் முதன்மையாது மாம்பழம். மாம்பழத்தை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த முடியும், புதுப்பொலிவு பெற வைக்க முடியும் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். அது எப்படி என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.


மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும். வைட்டமின் சி கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுக்களால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம்,மெக்னீசியம், காப்பர் ,வைட்டமின் பி6 ,வைட்டமின் கே ,பீட்டா ,கரோட்டின் ஆகிய சத்துக்கள் சரும துளைகளில் படியும் அழுக்கையும், கூடுதல் எண்ணெய் பசையையும் நீக்கும் பாக்டீரியா மற்றும் தீமை செய்யக்கூடிய கிருமிகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும். சுருக்கங்கள், கோடுகள்,ஸ்ட்ரெச் மார்க் ஆகியவற்றை குறைக்கும்.

இத்தகைய நன்மைகள் நிறைந்த மாம்பழத்தைக் கொண்டு முக அழகை மேம்படுத்தும் வழிகள் எப்படி என்பதை  இனி பார்ப்போம்.


மாம்பழத்தின் சதைப்பகுதியை சிறிது எடுத்து அதனுடன் சிறிது அளவு முல்தானி மெட்டி சேர்த்து பசை போல கலக்க வேண்டும். இதை முகம் முழுவதும் பூசவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

இரண்டு டீ ஸ்பூன் மாம்பழ கூழுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை காற்று புகாத கண்ணாடி குப்பியில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வெயில் காலங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்ப வந்ததும் இதை சிறிது எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் கருமை நீங்கும். இரண்டு டீஸ்பூன் மாம்பழக் கூழுடன் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.


இதை முகத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக இருபது நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும். முகப்பருக்களால் சிரமப்படுபவர்கள் மாம்பழக் கூழை பருக்களின் மேல் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பின்பு குறைந்த தண்ணீரை கொண்டு முகத்தை  கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை தீரும். இரண்டு டீஸ்பூன் மாம்பழக்கூழுடன் 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி முகப்பொலிவு அதிகரிக்கும்.

Tags:    

Similar News