தமிழகத்தில் 4வது அலை தொடங்கிவிட்டதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் 4வது அலை தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-04-24 08:45 GMT

அமைச்சர் மா. சுப்ரமணியன்.

இந்தியாவில் ஜூலை மாதம் 4வது அலை உச்சத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அதை உறுதிப்படுத்துவது போல் கடந்த சில நாட்களாக இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 60 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கொரோனாவின் அனைத்துவித அலைகளும் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஒரு வார காலத்தில், பெருந்தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் இதுவரையும் 2015 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 60 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக இறப்பு இல்லை, மேலும் 100 க்கும் கீழ் பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. மே 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 4 ஆம் அலை எதுவும் தொடங்க வில்லை. இது தொடர்பாக, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Tags:    

Similar News