தமிழகம், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா 4வது அலை ஆபத்து?

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 4வது அலை வருவதை தவிர்க்க முடியாது என மும்பை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-06-04 02:30 GMT

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு கொரோனா பரவலின் வேகம் குறைந்தது. குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் பெருந்தொற்றின் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. எனினும், கடந்த சில வாரங்களில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், தொற்றின் பரவல் மிதமாக எழுச்சி கண்டுள்ளது.

தமிழ்நாட்டில், மே மாதம் 27ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு 335 ஆக இருந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 659 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனவே உரிய கவனம் செலுத்த வேண்டுமென்று, மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

இதேபோல், மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும், 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து, மும்பை மாநகராட்சி ஆணையாளர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர். அவர் கூறுகையில், கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

எனவே, அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்து உள்ளது. எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்குவதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். 

Tags:    

Similar News