விவசாயிகளே, உங்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு! தமிழக அரசு அதிரடி

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-03-10 14:15 GMT

கோப்பு படம். 

நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் துறையை ஊக்குவிக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், மானியங்களை அறிவித்து வருகின்றன. அதேபோல், விவசாயிகளை ஊக்கப்படுத்த, பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகின்றன.

அதன்படி, வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலம் பெயரை பதிவு செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம்.

இதற்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக நூறு ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய இரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியான விவசாயிகளை கண்டறிய, மாவட்ட தேர்வுக்குழு அமைத்து, அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநிலக்குழுவிற்குப் பரிந்துரை செய்யப்படும். அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநிலக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு,  ஒரு விவசாயியையும்,  புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும்,  தேர்வு செய்து தலா ஒரு லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே 60 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதேபோல், வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். 

விண்ணப்பத்திற்கான கால அவகாசம், மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News