எங்கள் நாட்டுக்கு வாங்க: பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை நீட்டிக்கவும், சர்வதேச சூழல்கள் குறித்து கலந்துரையாடவும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். இதில் துணை பிரதமர், தொழிற்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து சர்வதேச அரசியல், வர்த்தகம் குறித்த கலந்துரையாடினார். மேலும், ரஷியா இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெய்சங்கரை, அந்நாட்டின் அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு புதின் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, "ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்து தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்டேன். அமைச்சர்கள் மந்துரோவ் மற்றும் லாவ்ரோவ் ஆகியோருடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள் அதிபர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளின் மேலும் முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதலைப் அவர் பாராட்டினார்" என்று தனது பக்கத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், "சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியும். உக்ரைன் நிலைமை உள்ளிட்ட சிக்கலான செயல்முறைகள் குறித்த அவரது அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் சூழல் குறித்து அவருக்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைத்திருக்கிறேன். அமைதியான வழிகளில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அவர் பாடுபடுவதை நான் அறிவேன்" என்று புதின் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu