யானைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம் - இன்று உலக யானைகள் தினம்!

Today is World Elephant Day- இன்று உலக யானைகள் தினம்! ( மாதிரி படம்)
Today is World Elephant Day- இன்று உலக யானைகள் தினம். இந்த நாளின் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்தப் படத்தின் கதை ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்தப் படம் 2012 ஓக.12இல் வெளியானது. அன்றைய தினம் முதல் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று யானைகளை இரண்டு பிரிவாக வகைப்படுத்தியுள்ளனர். ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் வசிக்கின்றன. 7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும் கொண்டவையாகும்.
காட்டிலிருந்த யானைகளை மனிதன் பிடித்து வந்து பழக்கினான். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டிப் போர் அடித்த சோழநாடு" என்ற சொற்றொடர் முற்காலத்தில் விவசாயத்திற்கு யானைகள் எவ்வாறு பயன்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
யானைப்படை மிகவும் முக்கியமான ஒன்று
பண்டையத் தமிழ் மன்னர்களின் நான்குவகை படைகளில், குஞ்சரப் படை எனப்படும் யானைப்படை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
போரிடுவதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்ட யானைகள், ஆலயங்களில் தெய்வ காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தந்தத்திற்காக யானைகளைக் கொல்வது அதிகரித்த காரணத்தால் 1872 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு, யானைகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. அதன்பிறகு சர்க்கஸ், ஆலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றில் மட்டுமே யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன.
உலத்திலே இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆபிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானை ஒரு முரட்டு விலங்கோ, கொடிய விலங்கோ அல்ல. மிகவும் மதிநுட்பம் வாய்ந்த விலங்கு
அதன் எல்லைக்கோட்டை அது நன்கு அறியும். பல நேரங்களில் காடுகளில் யானைகளை எதிர்கொள்ளும்போது அது, தான் இருக்கும் இடத்தை மரத்தின் கிளைகளை உடைத்து எச்சரிக்கும். அதன் பிறகு ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதையும் மீறி அருகில் செல்வோரை தாக்க வருவதைப் போல காதுகளை விரித்து வாலை சுருட்டியபடி நீண்ட பிளிறலுடன் ஓடி வரும். அப்போதும் மனிதன் அதை எதிர்க்கத் துணிந்தால் அவ்வளவு தான். நொடிப் பொழுதில் எதிர்ப்படுவோரை துவம்சம் செய்துவிடும்.
அசாதாரணமாக இறுதி நொடியில் கூட பலரை கொல்லாமல் விட்டு விடும் இரக்க குணமும் அதற்கு உண்டாம்.
இத்தகைய தன்மைகளைக் கொண்ட யானையின் தனி சிறப்புகள்
‘யானைகள், இயற்கையின் தலைச்சிறந்த படைப்பு. பிறருக்கு தீங்கு நினைக்காத ஒரே உயிரினம்’- என 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் எழுதியுள்ளார்.
“மேலே இருக்கும் வரிகளைப் படித்தால், சிலர் யோசிக்கலாம், யானைகள் மனிதர்களைத் தாக்குவதை, விரட்டுவதை, பார்த்திருக்கிறோமே என்று. ஆனால் என் பல வருட அனுபவத்தில் சொல்கிறேன், மனிதர்கள் மீதான முந்தைய அனுபவமே யானைகளின் நடவடிக்கையைத் தீர்மானிப்பவை” என்கிறார் எழுத்தாளர், வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் மற்றும் உயிரியலாளர் சங்கீதா ஐயர்.
ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2016இல் உருவாக்கப்பட்ட ‘வாய்சஸ் ஃபார் ஏசியன் எலிபன்ட்ஸ்’ (Voices for Asian Elephants) என்ற அமைப்பின் நிறுவனரான சங்கீதா, பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
“ஆண் யானைகளுக்கு இனப்பெருக்க காலத்தில் மஸ்த் எனும் மதனநீர் வெளியேறும். அப்போது யானைகள் மிகவும் மூர்க்கமாக இருக்கும். தங்களது பாதையில் எது வந்தாலும், யோசிக்காமல் அழித்துவிட்டு முன்னேறும். மிகவும் எளிதாக மதம் பிடிக்கும். அப்படி மதனநீர் வெளியேறும் பருவத்தில் இருந்த ஒரு ஆண் காட்டு யானையை, ஆய்வின் போது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது” என்கிறார் சங்கீதா.
சங்கீதா பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு, வனவிலங்குகள் குறித்த தனது ஆவணப்படத்திற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்றிருந்தார் சங்கீதா.
“எங்கள் குழு சென்ற வாகனத்திற்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் அது நின்றிருந்தது. அதன் காதுகளுக்கு பக்கத்தில் மதனநீர் வழிந்துக் கொண்டிருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை எங்களை நோக்கி முன்னேறியது. நாங்கள் வாகனத்தின் இன்ஜினை அணைத்துவிட்டு காத்திருந்தோம்”
“பாதையில் இருந்த மூங்கில் மரங்களை உடைத்து சாப்பிட்டவாறே, அது எங்களை நோக்கி வந்தது. நாங்கள் பதற்றப்படவில்லை, கத்தவில்லை, அதை பயமுறுத்தவில்லை.” என்று அன்று நடந்ததை விவரித்தார் சங்கீதா.
அவ்வப்போது யானை தங்களைத் தாக்க வருவது போல பாவனைகள் செய்ததையும், சுமார் 18 நிமிடங்கள் வரை பாதையை மறித்தவாறு நின்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
“பின்னர் அந்த யானை அமைதியாக திரும்பிச் சென்றது. எப்படி மதனநீர் வழியும் ஒரு யானை தாக்காமல், திரும்பிச் சென்றது என அந்தக் காணொளியை பார்த்த விலங்கு ஆய்வாளர்கள் பலர் ஆச்சரியப்பட்டனர். அதனால்தான் சொல்கிறேன், மனிதர்களுடனான அனுபவங்கள்தான் அவற்றின் நடவடிக்கையைத் தீர்மானிக்கின்றன.” என்கிறார் சங்கீதா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu