வானொலியின் தந்தை குக்லியெல்மோ மார்க்கோனி பிறந்த தினம் இன்று

வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான குக்லியெல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) பிறந்த தினம் இன்று
இத்தாலியின் பொலொனா நகரில் (1874) பிறந்தவர். தந்தை அந்நாட்டின் பெரும் புள்ளி என்பதால், இளமை யிலேயே வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். வீட்டுக்கே வந்து ஆசிரியர்கள் கற்பித்தனர். வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தார். இயற்பியலில், குறிப்பாக மின்சாரவியலில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. வீட்டில் சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டார்.
கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகம் இவரைக் கவர்ந்தது. தொடர்ந்து அதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்கும் முனைப்பில் இறங்கினார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார். 1895-ல் திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு செய்தியை அனுப்பினார்.
இத்தாலியில் இவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததால், இங்கிலாந்து சென்றார். அங்கு 6 கி.மீ. தொலைவு வரை செய்தியை அனுப்பக்கூடிய டிரான்ஸ்மிட்டரை உருவாக்கினார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1897-ல் இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி, இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் எல்லா கால நிலையிலும் இயங்கும் கம்பியில்லாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். இதன் பிறகு இத்தாலி அரசு இவரது ஆராய்ச்சிகளுக்கு பல உதவிகளை வழங்கியது. செனட்டராக நியமிக்கப்பட்டார்.
ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைகள், வர்த்தகக் கப்பல்கள் இவரது கம்பியில்லா தகவல் தொடர்புக் கருவிகளை அதிகம் பயன்படுத்தின. 1901-ல் 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.
மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தொடர் அலைகள் உற்பத்தி செய்யும் கருவியையும் கண்டறிந்தார். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்பமுடியும் என்பதை நிரூபித்தார். கார்ல் ஃபெர்டினான்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1909-ல் வழங்கப்பட்டது. 1912-ல் நிகழ்ந்த ஒரு விபத்தில் மார்க்கோனி வலது கண்ணை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1920-ல் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. இத்தாலி அரசு இவருக்கு கவுரவம் மிக்க பதவிகளை வழங்கிச் சிறப்பித்தது. 'மார்க்விஸ்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவருக்குப் பல்வேறு விருதுகள், பட்டங்களை வழங்கின. பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இன்றளவும் மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிவரும் வானொலியை உலகுக்கு வழங்கிய மார்க்கோனி 63 வயதில் (1937) மறைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu