ஜனவரி மாதம் ஒமிக்ரான் உச்சத்தில் இருக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோப்பு படம்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மூன்றாவது அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒமிக்ரான் திரிபு முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது, அப்போதிலிருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசாவே கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது லேசான அறிகுறிகளோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் மட்டும் பரவி இருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க 77 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. "ஒமிக்ரான் திரிபு உலகின் மற்ற பல நாடுகளிலும் பரவி இருக்கலாம், ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உலகம் முழுக்க பரவி வருகிறது, கொரோனா போலவே ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பரவலாம், ஜனவரி மாதம் ஒமிக்ரான் உச்சத்தில் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமிக்ரான் தோன்றியதிலிருந்து தென்னாப்பிரிக்காவிலும் அதன் பக்கத்து நாடுகளிகளிலும், பல நாடுகள் பயணத் தடைகளை விதித்தன, என்றாலும் ஒமிக்ரான் திரிபு உலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்க முடியாமல் போய் விட்டது.
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக, ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் குறைவாகவே நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் எனப்படும் கொரோனாவை செயலிழக்க வைக்கும் நோய் எதிர்ப்பான்கள் உற்பத்தியாவதாகக் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பற்றாக்குறை மூன்றாவது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் மூலம் ஈடுசெய்யலாம் என ஆய்வுகளில் கூறுகின்றனர்.
பூஸ்டர் டோஸ்கள் கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என டெட்ரோஸ் கூறினார். ஆனால் பூஸ்டர் செலுத்த யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதே கேள்வி. உலக நாடுகள் மத்தியில் உள்ள நியாயமற்ற தடுப்பூசி விநியோகம் தொடர்பான கவலைகளையும் வெளிப்படுத்தினார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். மறுபக்கம் சில நாடுகள் ஒமிக்ரான் திரிபை சமாளிக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன. பூஸ்டர் டோஸ் என்பது தேவையான அளவைவிட கூடுதலாக தடுப்பூசி செலுத்துவதை குறிக்கும். இன்னமும் ஏழை நாடுகளில், சில பாதிக்கப்படக்கூடிய மக்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படாமல் இருக்கின்றனர்.
"யாருக்கு முதலில் செலுத்த வேண்டும் என்கிற வரிசை முக்கியமானது. கடுமையான நோய்த் தொற்று ஏற்பட அல்லது இறப்பு அபாயம் குறைவாக உள்ளோருக்கு பூஸ்டர்கள் செலுத்துவது, தடுப்பூசி விநியோகப் பிரச்னை காரணமாக தங்களின் முதல் டோஸ் தடுப்பூசிக்காக அதிக அபாயத்தோடு காத்திருப்போரை மேற்கொண்டு அபாயத்தில் ஆழ்த்தும்" என்றும் கூறினார் டெட்ரோஸ்.
உலக நாடுகளுக்கு தடுப்பூசிப் பகிர்வு திட்டமான கோவேக்ஸ் மூலம் தடுப்பூசி விநியோகங்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளன. இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை இடையில் நிறுத்தியது, 2021ம் ஆண்டின் மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது போல, பல மில்லியன் டோஸ் தடுப்பூசி பற்றாக்குறை மீண்டும் ஏற்படுமோ என்ற சவாலை உலக சுகாதார அமைப்பு எதிர்கொள்கிறது.
"கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிட்டோம், அதன் விளைவுகளை நாம் இப்போது அறிந்து கொண்டோம். ஒமிக்ரான் திரிபு குறைந்த அளவுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது, அதை எதிர்கொள்ள சுகாதார அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu